தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. மூவேந்தர்கள் ஆட்சி புரிந்த இந்த தமிழ்மண்ணில் 16ஆம் நூற்றாண்டில் இந்த சேவல் சண்டை மிகவும் பிரபலம் அடைந்தது. போர் இல்லாத நேரங்களில் வீரர்கள் சோர்ந்து போகாமல் இருக்க இந்த சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது. சேவல்சண்டையின் போது சேவல்களின் கால்களில் கத்தியை கட்டிவிட்டு அவற்றை மோதவிட்டு போர் வீரர்கள் பொழுதுபோக்கினர். இவ்வாறு சேவல்சண்டையிடும் களம் ‘சாவக்கட்டு’ என்று இன்றளவும் தமிழகத்தின் பல ஊர்களில் மருவி அழைக்கப்படுகிறது.
மன்னர் காலத்தில் தொடங்கிய இந்த சேவல்சண்டை தமிழரின் கலாச்சாரமாக இன்றளவும் பொங்கல் நாட்களில் தொடந்து நடைப்பெற்று வருகிறது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், அரவக்குறிச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சேவல் சண்டை போட்டி பிரபலம். கத்தி கட்டி சேவல்களை மோதவிடுவதால் சேவல்கள் அதிகம் இறக்க நேரிடுவதோடு, ரத்தகோரத்தோடு சண்டை நடத்தப்படுவதால் அதற்கு மிருக வதை எதிர்ப்பு எழும்பவே கத்தி கட்டி சண்டையிடும் முறைக்கு அரசாங்கம் தடைவிதித்தது. நீதிமன்ற அனுமதியுடன் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி தற்போது சேவல் சண்டை போட்டி கத்திகட்டப்படாத வெற்றுக்கால் சேவல் சண்டைபோட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.
சண்டைசேவலை பெட்டைகோழியுடன் இணையவைத்து முட்டையிலிருந்து வெளிவரும் போதே குஞ்சுபருவத்திலேயே சண்டைசேவலை பிரித்தெடுத்து மற்ற கோழிகளுடன் சேரவிடாமல் எப்போதும் தனியாக கூண்டில் வைத்து பராமரித்து வருகின்றனர். நூரி, ஜாவா, சீத்தா, யாகூத்து, ஜகரியாகூத்து, தும்மரியாகுத்து, ஜரிதியாபிகா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சண்டைச்சேவல் வகைகள் உள்ளன. போட்டிக்கு 21 நாட்களுக்கு முன்பு எந்தசேவலுடன் எந்த சேவலை மோதவிடுவது என்பது தீர்மானிக்கப்படுகிறது. இது ‘ஜோடி சேர்த்தல்’ என்று அழைக்கப்படுகிறது. சேவல்களின் உயரம், வலு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஜோடி
அப்போதிருந்தே சண்டைசேவல்களுக்கு காலை, மாலை என இருவேளைகளில் பாதாம் பருப்பு உணவாக கொடுக்கப்படுகிறது. மேலும் பிஸ்தா, பேரீச்சம்பழம், தேன் ஆகியவற்றை கலந்து உருண்டையாகப் பிடித்தும் தினந்தோறும் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களும் அரைத்து தோசைக்களில் வைத்து சுட்டுகொடுக்கிறார்கள். சேவல்களுக்கு சுடு ஒத்தடம் செய்து பராமரிக்கிறார்கள். இவை தவிர ஒருநாள் உடற்பயிற்சியும், மறுநாள் நீச்சல்பயிற்சி என மாறிமாறி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஐனவரி 18,19ஆம் தேதிகளில் தஞ்சாவூர் ஞானம்நகரில் சமுத்திரம் ஏரி தென்கரையில் இந்த வெற்றுக்கால் சேவல்சண்டை போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழகம் ஆகிய தென்மாநிலங்களை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் அதிகமான சேவல்கள் பங்கேற்றன. வடஅமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் தற்போது சேவல்சண்டைகள் பிரபலமாகி வருகிறது. தமிழகத்தில் பன்நெடுங்காலமாக சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டு வந்தாலும் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் சேவல்சண்டை இளைஞர்களையும் ஈர்த்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக