பம்பரம் ஒரு சமானப்புள்ளியில் நிலைத்து, அதனைச்சுற்றிய அச்சில் சுழலும் ஒருவிளையாட்டுச் சாதனமும், அதனை வைத்து விளையாடப்படும் ஒரு விளையாட்டும் ஆகும். பம்பரத்தை அதன் தண்டைச் சுற்றி கைவிரல்கள் அல்லது கயிறு அல்லது சாட்டை கொண்டு சுழற்றி விடும்போதுவளைவுந்த விசையினால் நிலைத்திருந்து சுழல முடிகிறது. சுழலும்போது காற்றுமண்டலத்துடன் ஏற்படும் உராய்வினால் இந்த விசையின் தாக்கம் குறையும்போது முதலில் அச்சு திசைமாறி கடைசியாக நிலைதடுமாறி விழுகிறது. பம்பரம்உலகின் பல பகுதிகளிலும் விளையாடப்படுகிறது.
இந்த விளையாட்டு மிகத்தொன்மையான காலம் தொட்டே உலகின் பல பண்பாடுகளிலும் விளையாடப்பட்டு வந்துள்ளது. இதற்கான சான்றுகள் பல தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. இவ்விளையாட்டு சூதாடவும் வருங்காலம் உரைக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியங்களில் பம்பரம்
பம்பரம் பற்றிய குறிப்புகள் இராமாயணம் மற்றும் கந்தபுராணம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன. “பம்பரம் போலச் சுழன்றான்” என இராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது.
பம்பரம் விடும் விளையாட்டு தமிழக நாட்டுப்புறங்களில் சிறுவர்களால் 1950-ஆம் ஆண்டு வரையில் பரவலாக விளையாடப்பட்டது. இது ஒரு கைத்திற விளையாட்டு. இதில் ஓயாக்கட்டை, உடைத்த-கட்டை, பம்பரக்குத்து என 3 வகை உண்டு
ஓயாக்கட்டை
தரையில் அல்லது உள்ளங்கையில் பம்பரத்தை யார் அதிக நேரம் சுழலச் செய்கிறார்கள் என்று பார்த்துப் பழம் சொல்வது ஓயாக்கட்டை.
உடைத்த கட்டை
பட்டவனின் பம்பரத்தைச் சுற்றிவிடும் பம்பரத்தால் வட்டத்திலிருந்து அகற்றி ஓர் எல்லைவரை சுற்றிவிடும் பம்பரத்தாலேயே அகற்றிக்கொண்டு சென்று, பட்டவன் பம்பரத்தை உடைத்துவிடுவது உடைத்த கட்டை.
பம்பரக்குத்து
வட்டத்துக்குள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரத்தைச் சுற்றிவிடும் பம்பரத்தால் வெளியேற்றுவது பம்பரக்குத்து. மாங்கொட்டை அல்லது குச்சியை நடுவில் வைத்து அதனை வெளியேற்றுவர். வெளிவந்ததும் எல்லாரும் சிங்கம் தூக்குவர். கடைசியாகத் தூக்குபவர் பட்டவர். அவரது பம்பரம் வட்டத்துக்குள் வைக்கப்படும். இருவரோ, பலரோ சேர்ந்து இதனை விளையாடுவர். இந்த விளையாட்டில் 'தலையாரி ஆட்டம்' என்று 3 பாங்குகள் உண்டு.
- ஒரு வட்டம் போட்டு விளையாடுவது - ஒருவட்டக்குத்து,
- ஒன்றிற்குள் ஒன்றாக இரு-வட்டம் போட்டு விளையாடுவது - இருவட்டக்குத்து,
- குறிப்பிட்ட தொலைவில் இருவேறு வட்டங்கள் போட்டுக் கடத்திச் சென்று விளையாடுவது - தலையாரி ஆட்டம்
பம்பர-விளையாட்டுக் கலைச்சொற்கள்
- அமுக்கு = வட்டத்துக்குள் சுற்றும் பம்பரத்தை அமுக்கி வைத்தல்
- சாட்டையடி = சுற்றும் பம்பரத்தால் வெளியேற்றுவது
- சிங்கம் = பம்பரம் தரையில் சுற்றும்போது கயிற்றைச் சுண்டி எடுத்து அல்லது கையால் எடுத்து, கைத்திறனால் தொடர்ந்து சுற்றும்படி தரையில் விடாமல் கையில் பிடித்துக்கொள்ளுதல் அல்லது கையிலேயே சுழலச் செய்தல்
- பழம் = வெற்றி
- மட்டை = பம்பரத்தைத் தலைகீழாகச் சுற்றுதல்
- மட்டையடி = கயிற்றில் உருவிய பம்பரம் சுற்றாமல் வெளியேற்றுவது.
நன்றி:விக்கிப்பீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக