கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும். ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் இக் கலை நிகழ்த்தப்படுகிறது. கையில் கழிகளை வைத்தாடும் நாட்டார் கலை வடிவங்கள் நிறைய உண்டு. அவற்றில் கோலாட்டம் தனிச்சிறப்புப் பெற்ற ஒன்று. பல்வேறு பகுதிகளில் கண்ணன் பிறந்த நாளன்று சமயச்சடங்காகவும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இக்கலையைத் திருமணமாகாத ஆண்கள் மட்டுமே நிகழ்த்தினர். இப்போது பெண்கள் பெரும்பான்மையாக இக்கலையில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் தென் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து கோலாட்டம் நிகழ்த்துகிறார்கள். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும் உச்சத்தில் முடிவுறும்.
இதற்கென தனி அடவுகளும் உண்டு. இக்கலை சிற்சில வேறுபாடுகளுடன் வட மாநிலங்களில் "தாண்டியா" என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது. கோலாட்டத்தைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை ஆசான் என்பார்கள். ஆசான் இறந்து போனால் அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது மாணவர்கள் கோலாட்டம் நிகழ்த்தியபடி செல்வார்கள்.
காணிக்காரர்கள்/இனக்கலை
காணிக்காரர்கள் என்னும் ஆதியினம் கோலாட்டத்தைத் தங்கள் இனக்கலையாகக் கொண்டிருந்தது. காணிக்காரர்களின் தலைவர் மூட்டுக்காணியின் தலைமையில் ஓணம் பண்டிகை அன்று ஊர்ப்பொதுவிடத்தில் பிரமாண்டமான கோலாட்டம் நிகழ்த்தப்படும். காணிக்காரர்கள் கொரண்டி, கன்னங்கயிஞ்சி, சீதவெற்றம் ஆகிய மரங்களின் கம்புகளை கோலாட்டத்துக்கு உரிய கழியாகப் பயன்படுத்துவார்கள். இக்கழிகள் பளபளப்பாகவும், அடித்து ஆடும்போது கணீரென ஒலி எழுப்புவதாகவும் இருக்கும். அடர்ந்த காட்டுப்பகுதிகளில் மட்டுமே இக்கழி தரும் மரங்கள் வளர்கின்றன. இப்போது வனத்துறை நிர்ப்பந்தத்தால் காட்டுப்பகுதியை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் கையில் கிடைக்கும் எந்தக் குச்சியையும் இவர்கள் பயன்படுத்துகிறார்கள். காணிக்காரர்களின் கோலாட்டத்தில் காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள், அவர்களின் குல தெய்வங்கள் என்பன பாடுபொருளாகக் கொள்ளப்படும். பிற சமூகத்தினரின் கோலாட்டத்தில் தலைவர்களின் சிறப்புகள், புராண, இதிசாகங்கள் என்பன பாடுபொருளாகக் கொள்ளப்படும்.
வகைகள்
ஒற்றைக் கம்பால் அடித்து ஆடுவது, இரட்டை கம்பால் அடித்து ஆடுவது என கோலாட்டத்தில் இரண்டு வகைக் கலையாடல்கள் உள்ளன. கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக்கும்மி என மூன்று வகையான கலையாடல்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
பின்னல் கோலாட்டம்
பின்னல் கோலாட்டம் என்பது குறுந்தடிச் சிலம்பு எனப்படும் கோலாட்டத்தில் ஒரு வகை ஆகும். கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் பார்க்கச் சிறந்தது. ஒரு கயிறின் இரண்டு புறங்களிலும் கம்புகளைக் கட்டிக்கட்டிக்கொண்டு 10 பேர் ஆடுவார்கள். முன்னும், பின்னும் ஆடி அந்தக் கயிறுகளை பின்னல்களாக கோர்த்து, பின்னர் அதே ஆட்டத்தை திரும்பவும் ஆடி பின்னலை அவிழ்ப்பார்கள்.[1]பெரும்பாலும் திருமண வீடுகளில் இந்த கலையாடல் நிகழும். அதாவது மூன்று மூன்று கயிறுகளாக இடைவெளி விட்டு விட்டத்தில் கட்டியிருப்பார்கள். ஒரு கயிறுக்கு ஒன்று அல்லது இரண்டு பேர் வீதம் பிடித்துக்கொண்டே பாட்டுக்கு ஏற்றபடி கோலாட்டம் அடித்தபடியே ஊடாட வேண்டும். பாட்டின் முடிவில் அழகான பின்னல் வந்திருக்கும் கயிறுகளில். இது சற்றுக் கடினமான வகை கோலாட்டமாகும். கல்யாண கோலாகலத்தின் மூண்றாம் நாள் (முகூர்த்தம் முடிந்த அடுத்த நாள்) பிள்ளை வீட்டார் பெண்ணை அழைத்து கிளம்பும் முன், எல்லா பெண்டிரும், இந்த பின்னல் கோலாட்டம் ஆட்டம் ஆடுவார்கள்.
அமைப்பு
வட்டமான கட்டையில் ஓரத்தில் சுற்றி சுமார் 10 அல்லது 12 துளை போடப்பட்டிருக்கும். அதில் ஒவ்வொரு துளையிலும் நீண்ட மணியான் கயிறு எனப்படும் மெல்லிய உறுதியான கயிறு கோர்க்கப்பட்டு தோரணமாகத் தொங்கவிடப்பட்டு இருக்கும். அந்த கட்டையை கொக்கி மூலம் மரத்தின் கிளையில் கட்டிவிட்டு ஒவ்வொரு கயிறையும் ஆடுபவர்களிடம் கொடுப்பர். ஒரு கோலாட்ட கழியை அதில் சுற்றிக்கொள்ள வேண்டும். அதை இடது கையில் பிடிக்கவேண்டும். பின்பு இன்னொரு கழியை குறுக்கே 'T' போல வைத்துக்கொண்டு சுற்றி வட்டமாக நிற்க வேண்டும்.
ஆடலும் பாடலும்
பாடுபவர் பாட ஆரம்பித்ததும் ஆடுபவர்கள் வலது கையில் உள்ள கழியை கயிறு சுற்றி இருக்கும் கழியில் தட்டி குறுக்கும் நெடுக்கும் தாளத்திற்கு தகுந்தவாறு ஆடிக்கொண்டு செல்லவேண்டும். ஒவ்வொரு பாட்டுக்கும் வெவ்வேறு விதமான முறையில் நடன அசைவுகள் உண்டு. பாட்டு முடியும்போது அந்த கயிறுகள் பின்னிக்கொண்டு சடை போலவும் முருங்கைக்காய் போலவும் தெரியும். அதே போல் திரும்பவும் ஆடி முன்பு இருந்த நிலைக்கு வரவேண்டும். யாராவது தப்பாக ஆடிவிட்டால் ஆட்டம் முடியும்போது கயிற்றுப்பின்னல் சரியாக இருக்காது
புராணக்கதை
தேவர் உலகம் போர்க்களமாக மாறிக்கிடக்கிறது. தேவர்களை அழித்தொழிப்பது தான் தன் பிறப்பின் இலட்சியம் என்று உறுதியோடு போரிடுகிறான் பந்தாசுரன் என்ற கொடூர அசுரன். பந்தாசுரனை அழித்தொழிக்கும் நோக்கோடு களமாடுகின்றனர் தேவர்கள். இந்தப் போரில் தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பார்வதியம்மை ஒன்பது நாட்கள் கடும் தவம் புரிந்தாள். கடும் தவத்தால் பார்வதியின் பொலிவான முகம் அழகொழிந்து கருமை நிறமாகியது. அதிர்ந்துபோன சிவபெருமான் பல முயற்சிகளை மேற்கொண்டும் கருமைநிறம் களையவில்லை. பார்வதியின் தோழிகள் வருத்தமுற்று, நந்திதேவனை வணங்கி அவர் முன் கழிகளை ஆட்டியும், அடித்தும் நடனமாடினர். அவ்வாறு அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை அழிந்து பழைய பொலிவு முகத்தில் கூடி வந்தது. கோலாட்டத்தின் மேன்மையை விளக்கும் புராணக்கதை இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக